
நாடு முழுவதும் கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக நோய்த் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது.
மேலும், நாட்டில் உள்ள கொரோனா வைரஸ் பரிசோதனைக் கூடங்களின்
அழுத்தத்தைக் குறைப்பதற்காக ஒரு சில புதிய வழிகாட்டு நெறிமுறைகளை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வெளியிட்டுள்ளது.
நாட்டில் தற்போது மொத்தம் 2506 கொரோனா பரிசோதனை மையங்கள் மட்டுமே இயங்கி வருகின்றன. கொரோனா அதிக அளவில் பரவி வருவதால் பரிசோதனை கூடங்களுக்கு நிறைய பரிசோதனைகள் வருவதால் உடனடியாக சோதனை முடிவுகளை வழங்குவதில் தாமதம் ஏற்படுகின்றது.இதனால் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஒரு சில புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
- ஆர்டிபிசிஆர் சோதனை மூலம் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டப் பின் மீண்டும் அவருக்கு பரிசோதனை செய்ய வேண்டியது அவசியமில்லை.
- வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டவர்கள் கடைசி 3 நாட்களில் காய்ச்சல் இல்லையென்றால் பரிசோதனை செய்ய வேண்டாம்.
- மருத்துவமனைகளில் இருந்து கொரோனா சிகிச்சை முடிந்து திரும்புபவர்கள் மீண்டும் ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
- நலமுடன் இருப்பவர்கள் மாநிலங்களுக்கு இடையில் பயணிப்பதற்காக ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்கிறார்கள். இது முழுவதுமாக நீக்கப்படலாம்.ஆரோக்கியமான ஒரு தனிநபருக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனை தேவையில்லை.
- தனிநபர் ஒருவருக்கு காய்ச்சல், தலைவலி, தொண்டை வலி, மூச்சுவிடுவதில் சிரமம், உடல்வலி, சுவை உணர்வு, வாசனை உணர்வு இழத்தல், வயிற்றுப்போக்கு, வாந்தி, குமட்டல் போன்ற அறிகுறிகள் இருப்பவர்கள் மட்டுமே ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யலாம் என ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.
- ரேபிட் ஆட்டிஜென் சோதனை மூலம் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானால் அவர்கள் மீண்டும் ஆர்டிபிசிஆர் சோதனை செய்ய தேவையில்லை.
நாடு முழுவதும் இருக்கும் நகரங்கள், பள்ளிகள், கல்லூரிகள் , அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆன்டிஜென் சோதனையை அனுமதிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.