உலக நாடுகளை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் ஒமைக்ரான் வைரஸ், டெல்டா வைரஸை விட 6 மடங்கு மற்றவர்களுக்கு பரவும் திறன் கொண்டது என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள்.
ஒமைக்ரான் வைரஸானது நோய் எதிர்ப்பாற்றலை தாண்டிச் செல்லும் ஆற்றல் கொண்டதாகவும், தடுப்பூசி செலுத்தியவர்களையும் தாக்கக் கூடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மேலும் ஒமைக்ரான் தொற்றுப் பரவிய நோயாளிகளுக்கு, மோனோக்ளோனல் ஆன்டிபாடி சிகிச்சை அல்லது காக்டெய்ல் சிகிச்சை பலனளிக்காமல் போகலாம் என்றும் நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்றின் உருமாற்றம் அடைந்த டெல்டா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மோனோக்ளோனல் ஆன்டிபாடி சிகிச்சை பலனளித்தது. ஆனால், டெல்டா பிளஸ் வைரஸ் பாதித்தவர்களுக்கு இந்த சிகிச்சை பலனளிக்கவில்லை.மேலும் டெல்டா பிளஸ்-ஐ தொடர்ந்து ஒமைக்ரான் உருமாற்றம் அடைந்த வைரஸ் என்பதால், இதற்கும் மோனோக்ளோனல் சிகிச்சை பலனளிக்காமல் போகலாம் என்று கருதப்படுகிறது.
உருமாற்றம் அடைந்த புதிய கொரோனா வைரஸான பி.1.1.529 என்ற ஒமிக்ரான், தமிழகத்தில் பரவாமல் இருக்க அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஒமிக்ரான் வைரசை கண்டறியும் சோதனை வசதி தமிழகத்தில் உள்ள 12 அரசு ஆய்வகங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.சென்னை, கோவை, மதுரை, திருச்சி என 4 நகரங்களில் 12 அரசு ஆய்வகங்களில் இந்த சோதனை வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.