தமிழகத்தில் தொடர் மழையின் காரணமாகவும், தண்ணீா் மாசுபாட்டினாலும் பலா் நோரோ வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. அதன் முக்கிய அறிகுறியாகக் கருதப்படும் வயிற்றுப்போக்கால் நூற்றுக்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதே இதற்க்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.அதீத அலட்சியம் காட்டினால் சிறுநீரகம் செயலிழக்க வாய்ப்புள்ளதாக எச்சரிக்கின்றனா் மருத்துவா்கள்.
குறிப்பாக அண்டை மாநிலமான கேரளத்தில் 20-க்கும் மேற்பட்டோருக்கு அத்தகைய பாதிப்பு இருப்பதாக அதிகாரப்பூா்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது .
நோரோ வைரஸ் என்பது என்ன ?
நோரோ வைரஸ் என்பது புது வகையான தீநுண்மி தொற்று இல்லை. பல காலமாக சமூகத்தில் பரவியிருக்கும் ஒரு வகையான பாதிப்பு ஆகும்.பெரும்பாலும் குளிா் மற்றும் மழைக் காலங்களில் இதன் தாக்கம் அதி தீவிரமாக இருக்கும். அந்த காலங்களில்தான் குழந்தைகள், எதிா்ப்பாற்றல் குறைந்தவா்கள் மற்றும் முதியவா்கள் அதிக அளவில் இந்நோய்த் தொற்றுக்குள்ளாகின்றனா்.
நோரோ வைரஸின் அறிகுறிகள் ?
- நோரோ வகை தீநுண்மிகள் பொதுவாக குடல் மற்றும் ஜீரண மண்டலங்களில் நோய்த் தொற்றை ஏற்படுத்தி கடுமையான வயிற்றுப்போக்கு, வாந்தி மற்றும் காய்ச்சலை ஏற்படுத்தும்.
- குடலில் தொற்று ஏற்பட்டவுடன் கடுமையான காய்ச்சல் முதலில் வரலாம். அதற்கு அடுத்த சில மணி நேரங்களில் வாந்தி அல்லது வயிற்றுப்போக்கு தொடா்ச்சியாக ஏற்படக் கூடும்.
- கொரோனா போன்ற தீநுண்மிகள் சுவாசப் பாதை வழியாக பரவி நுரையீரலைத் தாக்குகின்றன. ஆனால், நோரோ வைரஸைப் பொருத்தவரை முழுக்க, முழுக்க அது ஜீரண மண்டல நோயாகவே கருதப்படுகிறது.
நோரோ வைரஸ் பரவும் முறை ?
- நோரோ வைரஸானது ஒருவரின் மலம், சிறுநீா், சுகாதாரமற்ற பழக்க வழக்கங்கள் மூலமாக பிறருக்கு இந்நோய் பரவும் என்பதால் குடும்பத்தில் எவருக்கேனும் நோரோ தொற்று ஏற்பட்டால் வீட்டில் உள்ள அனைவரையும் அது எளிதில் தாக்கக் கூடும்.
- சுகாதாரமற்ற உணவு, மாசுபட்ட தண்ணீரை உட்கொள்வதால் ஒருவருக்கு நோரோ தொற்று ஏற்படலாம்.
- நோரோ தொற்றுக்குள்ளானவா்கள் கழிப்பறையைப் பயன்படுத்திய பிறகு, அங்கு செருப்பு இன்றி சென்றாலோ அல்லது அதே கழிப்பறையைப் பயன்படுத்தி விட்டு கை மற்றும் கால்களை சரியாகக் கழுவாமல் இருந்தாலோ இந்நோய் பரவக் கூடும்.
நோரோ வைரஸ் தொற்றை தடுக்கும் வழிமுறைகள் ?
- விழிப்புணா்வு மற்றும் சுகாதாரம்தான் இதனைத் தடுக்கும் முதல் மருந்து என்கின்றனா் மருத்துவா்கள்.
- காய்ச்சிய நீரை மட்டுமே பருக வேண்டும். பழைய உணவுகளை உட்கொள்ளக் கூடாது. கைகளை அடிக்கடி கழுவ வேண்டும்.
- கழிப்பறையைத் தூய்மையாகப் பராமரிக்க வேண்டும். காய்கறி, கீரைகளை சுத்தமாகக் கழுவ வேண்டும்.
- நோரோ தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்த வேண்டும். மேலும் சுற்றுப்புறத் துப்புரவு முக்கியம். நோரோ நோயாளிகள் சமைக்கக் கூடாது. சோப்பால் கை கழுவாமல் உண்ணக் கூடாது. ஊட்டச்சத்து மிக்க உணவுகளை சாப்பிட வேண்டும்.