
உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியானது தலைநகர் டெல்லியில் கடந்த மாதம் 18 ஆம் தேதி தொடங்கியது.இப்போட்டியில் 53 நாடுகளைச் சேர்ந்த 294 வீரர் ,வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியானது நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் இந்திய அணி 15 தங்கம் உள்பட 30 பதக்கங்கள் குவித்து முதலிடத்தை பெற்றுள்ளது.
உலக கோப்பை பதக்க பட்டியலில் இந்தியா 15 தங்கம், 9 வெள்ளி, 6 வெண்கலம் என மொத்தம் 30 பதக்கங்களுடன் முதலிடத்திலும்,அமெரிக்கா 4 தங்கம், 3 வெள்ளி, ஒரு வெண்கலம் என மொத்தம் 8 பதக்கத்துடன் இரண்டாவது இடத்திலும்,இத்தாலி 2 தங்கம், 2 வெண்கலம் என்று 4 பதக்கத்துடன் மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளது.
உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் ஆண்களுக்கான டிராப் அணிகள் பிரிவில் கைனன் செனாய், பிரித்விராஜ் தொண்டைமான், லாக்ஷே ஷெரான் ஆகியோர் அடங்கிய இந்திய அணியினர், சுலோவக்கியா அணியை எதிர்கொண்டனர்.இதில் முதலில் பின்தங்கிய இந்திய அணி பின்னர் சாதுரியமாக முன்னேறி கடைசி கட்ட ரவுண்டுகளில் இலக்கை துல்லியமாக சுட்ட இந்திய குழுவினர் 6-4 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை பெற்றது.இதில் இந்திய அணியில் இடம்பெற்ற பிரித்விராஜ் தொண்டைமான் தமிழகத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல்,பெண்கள் பிரிவில் ஸ்ரேயாசி சிங், ராஜேஷ்வரி குமாரி, மனிஷா கீர் ஆகியோரை கொண்ட இந்திய அணி 6-0 என்ற கணக்கில் கஜகஸ்தானை சுலபமாக வீழ்த்தி தங்கப்பதக்கத்தை பெற்றது.