
தொலைதூரக் கல்வி முறையில் தமிழகம், புதுச்சேரியில் உள்ள 3 அரசு பல்கலைக்கழகங்களில் 25 புதிய படிப்புகளுக்கு யுஜிசி ஒப்புதல் வழங்கியுள்ளது.
தொலைதூரக் கல்வி முறைக்கு நாடு முழுவதும் கூடுதலாக 11 பல்கலைக்கழகங்களில் 74 படிப்புகளுக்கு யுஜிசி ஒப்புதல் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தமிழகத்தில் திருநெல்வேலியில் உள்ள மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் 5 இளநிலை, 5 முதுநிலை என 10 படிப்புகளுக்கும், சென்னை பல்கலைக்கழகத்தில் ஒரு இளநிலை, 2 முதுநிலை என 3 படிப்புகளுக்கும், புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் 8 இளநிலை, 4 முதுநிலை என12 படிப்புகளுக்கும் யுஜிசி தற்போது அனுமதி வழங்கியுள்ளது.
நாட்டில் உள்ள அனைத்துவகையான பல்கலைக்கழகங்களும் புதிய பட்டப் படிப்புகளை தொடங்க பல்கலைக்கழக மானியக் குழுவிடம் (யுஜிசி) முறையான அனுமதி பெறவேண்டியது அவசியமாகும்.இதன்படி தொலைதூர படிப்புகளை தொடங்க பல்வேறு கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி கடந்த மார்ச் மாதம் அனுமதி வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.