![](https://tamil.aptinfo.in/wp-content/uploads/2021/08/NEET-Exam-2021.jpg)
ஒவ்வொரு ஆண்டும் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்க்கான ‘நீட்’ நுழைவுத்தேர்வு மே மாதங்களில் நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த ஆண்டு கொரோனா பெருந் தொற்று காரணமாக நீட் நுழைவுத் தேர்வு தாமதமாக நடந்தது. இதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டும் கொரோனா நோய்த்தொற்று அதிகரித்து வருவதன் காரணமாக தாமதமாகவே நடைபெற இருக்கிறது.
நாடு முழுவதும் ‘நீட்’ தேர்வு அடுத்த மாதம் (செப்டம்பர்) 12-ந்தேதி நடக்க இருக்கிறது. நோய்த்தொற்றை கருத்தில் கொண்டு கடந்த ஆண்டு 155 நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது நடப்பாண்டில் 198 நகரங்களாக அதிகரித்து இருக்கிறது.
‘நீட்’ தேர்வுக்கான விண்ணப்பப்பதிவு கடந்த மாதம் (ஜூலை) 13-ந்தேதி முதல் https://ntaneet.nic.in/என்ற இணையதளத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே கடந்த 6-ந்தேதி விண்ணப்பதிவு செய்ய கடைசிநாள் என்று அறிவிக்கப்பட்டு, பின்னர் 10-ந்தேதி (இன்று) வரை காலநீட்டிப்பு செய்யப்பட்டது. அந்தவகையில் நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கு இன்று (செவ்வாய்க்கிழமை) கடைசி நாள் ஆகும்.
இதன் தொடர்ச்சியாக விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்வதற்கு நாளை (புதன்கிழமை) முதல் 14-ந்தேதி (சனிக்கிழமை) வரை கால அவகாசம் வழங்கப்பட்டு இருக்கிறது. இதனை பயன்படுத்தி தேர்வர்கள் ஏதேனும் திருத்தங்களை மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.