
TNUSRB தேர்வு வாரியத்தால் அறிவிப்பு வெளியிடப்பட்ட சிறைக்காவலர், இரண்டாம்நிலை காவலர் மற்றும் தீயணைப்பு மீட்பு பணிகள் உள்ளிட்ட பணிகளுக்கு கடந்த ஆண்டு டிசம்பர் 13ம் தேதி தமிழகத்தில் 37 மையங்களில் எழுத்துத்தேர்வு நடைபெற்றது. இந்த எழுத்துத்தேர்வுக்கான முடிவுகள் கடந்த பிப்.19ம் தேதி வெளியிடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்ற தேர்வர்களுக்கு 1:5 என்ற விகிதத்தில் 20 மையங்களில் அசல் சான்றிதழ்கள் சரிபார்த்தல், உடற்கூறு அளத்தல், உடற்தகுதி தேர்வு மற்றும் உடற்திறன் போட்டிகள் நடத்தப்பட்டன. மேலும் கடந்த செப்.22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட தேர்வர்களுக்கு மேற்கூறிய உடற்திறன் போட்டிகள் நடத்தப்பட்டன.
தற்போது இறுதியாக 3,845 பேர் மாவட்ட/மாநகர ஆயுதப்படைக்கும், 6,545 பேர் தமிழ்நாடு சிறப்புக் காவல் படைக்கும் தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டுள்ளவர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.மேலும் 129 பேர் சிறை மற்றும் சீர்திருத்தப்பணிகள் துறைக்கும் மற்றும் 1,293 பேர் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைக்கும் தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டுள்ளவர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்பட்ட தற்காலிக தேர்ந்தோர் பட்டியலை TNUSRB இணையதளமான www.tnusrbonline.org ல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் தேர்வு செய்யப்பட்ட அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை மற்றும் முந்தைய பழக்க வழக்கம் தொடர்பான காவல் விசாரணை விரைவில் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.