
செவ்வாய்க்கிரகத்தில், ‘இன்ஜெனியூனிட்டி’ ஹெலிகாப்டர் வெற்றிகரமாகப் பறந்ததாக நாசா அறிவித்துள்ளது. இதன்மூலம் வேற்று கிரகத்தில் முதன்முதலாக ஹெலிகாப்டரை இயக்கி வரலாற்று சாதனையை நாசா படைத்துள்ளது.
நாசா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் பெர்சீவரன்ஸ் ரோவர் என்ற விண்கலத்தை செவ்வாய்க்கிரகத்திற்கு அனுப்பியது.இந்த விண்கலமானது செவாய்க்கிரகத்தில் உயிர்கள் வாழ்வதற்கான சாத்திய கூறுகள் உள்ளனவா,மேலும் உயிர் வாழ்ந்த தடயங்கள் உள்ளனவா என்று ஆராய்ச்சி செய்வதற்கு அனுப்பப்பட்டது. இந்த விண்கலமானது செவ்வாய் கிரகத்தில் ஜெசேரோ என்ற பள்ளப் பகுதியில் கடந்த பிப்ரவரியில் தரையிறங்கியது குறிப்பிடத்தக்கது. மேலும்,இந்த விண்கலத்தில் ‘இன்ஜெனியூட்டி’ எனப் பெயரிடப்பட்டுள்ள சிறிய ஹெலிகாப்டா் இணைக்கப்பட்டிருக்கிறது.
செவ்வாய்க்கிரகத்தின் மேற்பரப்பில் ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு செய்ய நாசா திட்டமிட்டிருந்தது.ஆனால் மென்பொருள் தொடர்பான பிரச்சினையால்,கடந்த 11-ந் தேதி செவ்வாய் கிரகத்தில் பறக்கவிட இருந்த இன்ஜெனியூனிட்டி ஹெலிகாப்டரின் திட்டம் தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது செவ்வாய்க்கிரகத்தில், ‘இன்ஜெனியூனிட்டி’ ஹெலிகாப்டரை வெற்றிகரமாகப் பறக்கச் செய்து நாசா வரலாற்று சாதனையை படைத்துள்ளது.
விஞ்ஞானிகள் செவ்வாய் கிரகத்தில் இன்ஜெனியூட்டி ஹெலிகாப்டா் வெற்றிகரமாகப் பறந்ததை ‘ரைட் சகோதரா்கள்’ தருணம் என கூறுகின்றனா்.உலகிலேயே முதல் விமானமான (1903 – ரைட் சகோதரா்கள்) அதன் இறக்கையில் இடம்பெற்றிருந்த துணியின் ஒரு சிறிய பகுதி இன்ஜெனியூட்டி ஹெலிகாப்டரில் பொருத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.