
ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லும் என்று தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஆசிரியர் தகுதித் தேர்வில்(டெட்) ஒரு முறை தேர்ச்சி பெற்றால் போதும் அது ஆயுள் முழுவதும் செல்லும் என்று தேசிய ஆசிரியர் கல்விக்குழு தற்போது அறிவித்துள்ளது.
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு 7 ஆண்டுகள் மட்டுமே அதற்கான சான்றிதழ் செல்லும் என்ற விதி இருந்த நிலையில் கடந்த ஆண்டு தேசிய ஆசிரியர் கல்விக்குழு அதில் மாற்றம் செய்திருந்தது. மத்திய கல்வி அமைச்சகமும் இதுகுறித்த அறிவிப்பை கடந்த ஜூன் மாதம் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழ் செல்லுபடியாகும் காலத்தை ஆயுள்வரை நீட்டித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
2011 ஆம் ஆண்டு முதல் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதியவர்களுக்கும் இது பொருந்தும் என்றும் இனிவரும் நாள்களில் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதுவோருக்கு, ஆயுள் முழுவதும் செல்லும் வகையில் சான்றிதழ் அளிக்கப்படும் என்றும் தமிழ்நாடு பள்ளி கல்வித் துறை தெரிவித்துள்ளது.

