
பொறியியல் கல்லூரிகளில் இளநிலை (பி.இ., பி.டெக். ) படிப்புகளில் முதலாம் ஆண்டில் சேர்வதற்க்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் துணை கலந்தாய்வு இன்று (வியாழக்கிழமை) முதல் தொடங்கி நடைபெற இருக்கிறது.
இந்நிலையில், தற்போது அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.இதில் முழுநேர பி.இ., பி.டெக். முதலாம் ஆண்டில் சேர்ந்த மாணவர்களுக்கான வகுப்புகள் வருகிற 1-ந்தேதி (திங்கட்கிழமை) தொடங்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளது.
இதன்படி,வருகிற 1-ந்தேதி முதல் 2 வாரங்களுக்கு மாணவர்களுக்கு அடிப்படை கல்விகள், கற்றல் செயல்பாடுகள் உள்பட புத்தாக்க பயிற்சிகள் குறித்து நடத்தப்படும். பின்னர் வருகிற 15-ந்தேதி முதல் படிப்புக்கான வகுப்புகள் ஆன்லைன் மூலம் தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் செமஸ்டருக்கான கடைசி வேலைநாட்கள் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 1-ந்தேதி ஆகும்.
மேலும், செமஸ்டருக்கான தேர்வு மார்ச் மாதம் 7-ந்தேதி ஆரம்பிக்கப்படும். அதேபோல், முதல் செமஸ்டருக்கான முதல் மதிப்பீட்டு தேர்வு டிசம்பர் 23-ந்தேதியில் இருந்து அடுத்த ஆண்டு ஜனவரி 3-ந்தேதிக்குள்ளும், 2-ம் மதிப்பீட்டு தேர்வு பிப்ரவரி 15-ந் தேதி முதல் 24-ந்தேதிக்குள்ளும் நடத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
முதல் மதிப்பீட்டுக்கான அறிக்கையை ஜனவரி 5-ந்தேதியும், 2-ம் மதிப்பீட்டுக்கான அறிக்கையை மார்ச் 1-ந்தேதியும் தேர்வு கட்டுப்பாட்டு மையத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று அண்ணா பல்கலைக்கழக கல்வி படிப்புகள் மையம் அறிவித்துள்ளது. அடுத்த செமஸ்டருக்கான வகுப்புகள் ஏப்ரல் மாதம் 4-ந் தேதி தொடங்க முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.