
தமிழகத்தில் செப்டம்பர் 1 முதல் பள்ளிகள் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில்,பள்ளிகளில் பின்பற்றப்பட வேண்டிய கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக மருத்துவத்துறை இன்று வெளியிட்டுள்ளது.
கொரோனா பெருந்தொற்று காரணமாக அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டன .தற்போது கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வரும் நிலையில் பள்ளிகளை திறக்க பல்வேறு தரப்பிலும் கோரிக்கைகள் வைக்கப்பட்டன .அதன் அடிப்படையில் செப்டம்பர் 1ஆம் தேதி 9 முதல் 12 வகுப்பு வரை 50 சதவீத மாணவர்களுடன் பள்ளிகளை திறக்க உத்தேச தேதியை தமிழக அரசு அறிவித்திருந்தது.மேலும் பள்ளிகளை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தற்போது தமிழக அரசு வெளியிட்டுள்ளது .அவை பின்வருமாறு..
- கொரோனா பரவல் காரணமாக அனைத்து பள்ளிகளிலும் கிருமி நாசினி மற்றும் கைகழுவ தண்ணீர் உள்ளிட்டவை ஏற்பாடு செய்திருக்க வேண்டும்.
- கொரோனா அறிகுறி உள்ள மாணவர்கள் அல்லது ஆசிரியர்கள் கண்டிப்பாக பள்ளிக்கு வர அனுமதிக்க கூடாது
- மாணவர்களுக்கு சத்து மாத்திரை மற்றும் நோய் எதிர்ப்பு சக்திக்கு தேவையானவற்றை முறையாக வழங்க வேண்டும்.
- கொரோனா தடுப்பூசி செலுத்தும் தகுதியான மாணவர்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்
- ஒரே நேரத்தில் 50 சதவீத மாணவர்கள் மட்டுமே பள்ளிக்கு அனுமதிக்க வேண்டும்
- பள்ளி வளாகத்தை சுத்தமாக வைத்திருப்பதை பள்ளி நிர்வாகம் அல்லது உள்ளாட்சி நிர்வாகம் உறுதி செய்யவேண்டும்
- பள்ளிகளில் உள்ள மேஜைகள், கேண்டீன், கழிவறைகள், அனைத்து வகுப்பறைகள், நூலகம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளும் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்திருக்க வேண்டும்
- பள்ளி வாகனங்களை புறப்படுவதற்கு முன்பாக கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்தல் வேண்டும்
- பள்ளிகளில் ஒவ்வொரு இருக்கைக்கும் நடுவே குறைந்தது 6 அடி இடைவெளி இருக்க வேண்டும்
- ஆசிரியர்கள் அறை, அலுவலகம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்
- பள்ளியின் கழிவறைக்கு வெளியே, கைக்கழுவுமிடம் உள்ளிட்ட பகுதிகளில் சமூக இடைவெளியை பின்பற்றி வட்டம் போடப்பட்டிருக்க வேண்டும்
- பள்ளிகளில் விழாக்கள் அல்லது நிகழ்ச்சிகள் நடத்துவதை தவிர்க்க வேண்டும்
- கட்டுப்பாட்டு பகுதிக்குள் இருக்கும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பள்ளிகளுக்கு வர அனுமதி இல்லை.