
தொழில் முறை ஆங்கிலப் படிப்பை அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் முன்னோட்டமாக அமல்படுத்துவது குறித்து தமிழ்நாடு உயா்கல்வி மன்றம் சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களின் கீழ் செயல்பட்டு வரும் கல்லூரிகளில், கடந்த கல்வியாண்டில் (2020-2021) இளநிலை பிரிவில் தொழில்முறை ஆங்கிலப் படிப்பு அமல்படுத்தப்பட்டது. முதல் மற்றும் இரண்டாவது பருவங்களில் தொழில்முறை ஆங்கிலப் படிப்பு கற்பிக்கப்பட்டது.
நடப்பு கல்வியாண்டிலும், முதல் மற்றும் இரண்டாவது பருவங்களில் தொழில்முறை ஆங்கிலப் படிப்பை முன்னோட்டமாக அனைத்துப் பல்கலைக்கழகங்களும் அமல்படுத்த வேண்டும். அடுத்த கல்வியாண்டில், மூன்றாவது மற்றும் நான்காவது பருவங்களில் தொழில்முறை ஆங்கிலப் படிப்பு அமல்படுத்தப்படும். அதற்கான, பாடத்திட்ட வடிவமைப்புகள் குறித்து அனைத்துக் கல்லூரிகளும் கருத்து தெரிவிக்கலாம் என்று தமிழ்நாடு உயா்கல்வி மன்றத்தின் உறுப்பினா் செயலா் கிருஷ்ணசாமி, அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தா்கள் மற்றும் பதிவாளா்களுக்கு கடிதம் ஒன்றில் தெரிவித்துள்ளார்.