
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 16-வது பாராஒலிம்பிக் போட்டிகள் தற்போது நடைப்பெற்று வருகின்றன. மாற்றுத்திறனாளிகளுக்கான இந்த போட்டிகளில் 162 நாடுகளை சேர்ந்த 4,403 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
பாராலிம்பிக் போட்டியில் நேற்று நடைபெற்ற உயரம் தாண்டுதல் (டி42) போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் உள்பட மூன்று பேர் பங்கேற்றனர். இறுதிச் சுற்றில் இந்திய வீரரும் தமிழகத்தை சேர்ந்தவருமான மாரியப்பன் 1.86 மீட்டர் உயரம் தாண்டி வெள்ளிப் பதக்கத்தை வென்றார். மற்றொரு இந்திய வீரர் சரத்குமார் வெண்கலப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர்.
பாராலிம்பிக் போட்டியில் அமெரிக்க வீரர் சாம் கிரேவ் மற்றும் மாரியப்பன் ஆகியோர் சமமான உயரம் தாண்டியதால் மேலும் மூன்று வாய்ப்புகள் கொடுக்கப்பட்டது. இதில் அமெரிக்க வீரர் 1.88 மீட்டர் உயரம் தாண்டி முதல் இடம் பிடித்தார். மாரியப்பன் 1.86 மீட்டர் உயரம் தாண்டி 2-வது இடம் பிடித்தார்.மற்றொரு இந்திய வீரர் சரத் குமார் 1.83 மீட்டர் உயரம் தாண்டி வெண்கலப்பதக்கம் வென்றார்.
மாரியப்பன் ஏற்கனவே பிரேசில் நாட்டில் நடைபெற்ற ரியோ பாராலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.