
தமிழ் வழியில் பயின்று குரூப் 1 முதல்நிலைத் தேர்வு எழுதியவர்கள் தங்கள் தமிழ் வழியில் பயின்றதற்கான சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யுமாறு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தேர்வாணையத்தால் கடந்த 03.01.2021 அன்று ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு – 1 நடத்தப்பட்டது.முதல்நிலைத் தேர்வெழுதிய விண்ணப்பதாரர்கள் தமிழ் வழியில் பயின்றுள்ளதாக தனது இணையவழி விண்ணப்பத்தில் கோரியுள்ளனர்.
கீழ்க்காணும் கல்வித் தகுதிகளையும், தமிழ் வழியில் பயின்றதற்கான சான்றிதழ்களையும் தேர்வாணைய இணையதளத்தில் 05.08.2021 அன்று வெளியிடப்படவுள்ள உரிய படிவத்தில் 16.08.2021 முதல் 16.09.2021 வரை (வேலை நாள்களில்) ஸ்கேன் செய்து தேர்வாணைய இணையதளத்தில் அல்லது அரசு இ-சேவை மையங்கள் மூலமாக பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று டின்பிஎஸ்சி அமைப்பு தெரிவித்துள்ளது.
- பள்ளி முதல் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு வரை
- மேல்நிலை முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு அல்லது பட்டயப்படிப்பு
- பட்டப்படிப்பு
இது குறித்த தகவல்கள் தமிழ் வழியில் கல்வி பயின்றதாக குறிப்பிட்டு முதனிலைத் தேர்வு எழுதியவர்களுக்கு மட்டும் குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் வாயிலாக தெரிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.இதனைத் தவிர தேர்வாணைய இணையதளம் மூலமாகவும் இது குறித்த குறிப்பாணையினை 05.08.2021 முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மேற்குறிப்பிட்ட நாட்களுக்குள் விண்ணப்பதாரர்கள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யவில்லை எனில் அவர்களது விண்ணப்பம் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது எனத் தெரிவிக்கப்படுவதாக தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் கிரண் குராலா தெரிவித்துள்ளார்.