
கொரோனா தொற்று பரவலைத் தொடர்ந்து தற்போது நம்மை அச்சுறுத்தும் நிபா வைரஸ் குறித்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகிறது.கொரோனா அளவிற்கு நிபா வைரஸ் பரவ கூடியது அல்ல என்றாலும், 10 சதவீதற்கும் குறைவாக ஒரு நோயாளியிடமிருந்து மற்றொருவருக்கு பரவ வாய்ப்பு உள்ளதாக கூறுகின்றனர்.
இந்தியாவில் நிபா வைரஸானது கடந்த 2001 மற்றும் 2007 ஆம் ஆண்டுகளில் மேற்கு வங்காளத்திலும், 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் கேரளாவிலும் நிபா வைரஸ் கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.
நிபா வைரஸ் கண்டறியும் முறை:
நிபா வைரஸின் பிறப்பிடமாக இருப்பது வௌவால்கள் என்று சில ஆய்வுகள் கூறுகின்றன. இந்த வைரஸ், மனித உடலுக்குள் புகுந்த 4 முதல் 14 நாட்களில் நோய் அறிகுறி தென்படும் என்றும் ரத்தம், சிறுநீர், தொண்டையிலிருந்தும், மூக்கிலிருந்தும் வெளியாகும் சளி போன்றவற்றிலிருந்து எடுக்கப்படும் மாதிரிகளை ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தி இவ்வகை வைரஸ் பாதிப்பை கண்டறிய முடியும் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.
நிபா வைரஸின் அறிகுறிகள் :
கடுமையான மூச்சுத்திணறல், காய்ச்சல், தலைவலி, உடல் சோர்வு, மனிதர்களிடையே பரவுவதற்கான வாய்ப்பு, போன்ற அறிகுறிகளுடன், நிபாவின் இறப்பு சதவீதம் 50 முதல் 75 சதவீதமாக இருப்பது அதன் கொடிய தன்மையாக பார்க்கப்படுகிறது. நிபா வைரசுக்கான சிகிச்சை அளிப்பதற்காக இதுவரை எந்த மருந்தும் அங்கீகரிக்கப்படவில்லை. உடல்நலக் குறைவுக்கான சிகிச்சை அளிக்க கூடிய மருந்துகள் மட்டுமே உலக சுகாதார நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன
நிபா வைரஸ் பரவாமல் தடுக்க நாம் பின்பற்றவேண்டியவை :
- நிபா வைரஸ் தொற்று பரவியதாக தெரியவந்தால் விலங்குகள் வசிக்கும் இடங்களை கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்துவதுடன் அது போன்ற விலங்குகளை தனிப்படுத்த வேண்டும்.
- நிபா வைரஸ் தாக்கி இறந்த விலங்குகள் உடல்களை பாதுகாப்பான முறையில் எரிக்க வேண்டும்.
- பன்றிகளும், பழந்தின்னி வவ்வால்களும்தான் நிபா வைரஸ் பரவலுக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

- கடிக்கப்பட்ட பழங்கள் உண்பதை தவிர்ப்பதுடன் மற்ற பழங்களை நன்கு கழுவியும் உண்பது வைரஸ் பரவலை தடுக்க உதவும் என்று சுகாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
- பறவைகள் அதிகம் கூடும் இடங்களுக்கு செல்லக் கூடாது.
- பறவைகள் கடித்து போட்ட பழங்களை ஒருபோதும் உண்ணக்கூடாது.
- முக கவசம் அணிவது போல் கைகளுக்கும் கையுறை அணிய வேண்டும்.
- நோய் பாதிப்பு உள்ள மிருகங்களுடன் பழக கூடாது.
- மிருகங்களையோ அல்லது பறவைகளையோ தொட்டால் உடனே கைகளை சானிடைசர் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.
- மிருகங்கள், பறவைகளின் எச்சத்தை மிதித்தால் உடனே உடலை சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.