
உலகையே அச்சுறுத்தி வரும் பி.1.1.529 என்று பெயரிடப்பட்டுள்ள புதிய வகை கொரோனா வைரஸ், இதுவரை இல்லாத வைரஸ்களில் இது மிக மோசமானது என்கின்றனர் மருத்துவ வல்லுநர்கள்.மேலும் இந்த வைரஸ் நோய் எதிர்ப்புச்சக்தியை தவிர்க்கும் தன்மையை கொண்டிருப்பதுதான் மிகவும் கவலை தருவதாக ஆய்வியல் அறிஞர்கள் கூறுகின்றனர்.
தற்போது உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக தடுப்பூசிகள் போட்டு வருகின்றன.இந்நிலையில் தற்போது அச்சுறுத்தி வரும் புதிய வகை கொரோனா வைரசுக்கு எதிராக தடுப்பூசிகள் பெரிய அளவில் செயல்திறனை கொண்டிராது என்றும் ,நிச்சயமாக குறைவான செயல்திறனையே இது கொண்டிருக்கும் என்று கூறப்பட்டு வருகிறது.மேலும் இந்த புதிய வகை கொரோனா அதிவேகமாக பரவும் என்றும் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
தற்போது பரவி வரும் புதிய வகை கொரோனா வைரஸ்க்கு விஞ்ஞானிகள் கிரேக்க எழுத்தான ‘ஒமைக்ரான்’ என்ற பெயரை சூட்டியுள்ளனர் .மேலும் இந்த புதிய வகை கொரோனா வைரஸ் கட்டுக்கடங்காமல் வேகமாக பரவக்கூடியது என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
புதிய கொரோனா பரவியுள்ள தென் ஆப்பிரிக்கா, போட்ஸ்வானா, ஹாங்காங் ஆகியவற்றில் இருந்து இந்தியாவுக்கு வருகிறவர்களையும், இந்த நாடுகளின் வழியாக வருகிறவர்களையும் தீவிரமாக பரிசோதிக்க வேண்டும் என்று மாநிலங்களை மத்திய அரசு உஷார்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.