
நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருகிறது.கொரோனா இரண்டாவது அலைக்கு முக்கிய காரணமாக இருப்பது டெல்டா வகை கொரோனா ஆகும்.ஏனென்றால் இந்த வகை வைரஸ் வேகமாக பரவும் தன்மை கொண்டது. மேலும் இது உடனடியாக நுரையீரலைத் தாக்கும் என்று கூறப்படுகிறது.
தற்போது உருமாறிய கொரோனாவை கண்டுபிடிக்க மாதிரிகள் சேகரிக்கப்பட்டு புனேயில் உள்ள தேசிய வைராலஜி பகுப்பாய்வு கூடத்துக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.தற்போது இந்த நவீன வசதியுடன் கூடிய பகுப்பாய்வுகூடம் சென்னையில் தொடங்கப்பட உள்ளது.
கொரோனா மாதிரிகளை ஆய்வு செய்யும் மரபணு ஆய்வு கூடங்கள் பெங்களூர், ஐதராபாத், மணிப்பால், புனே உள்பட சுமார் 10 இடங்களில்தான் உள்ளது. இந்த ஆய்வகங்களுக்கு பல மாநிலங்களில் இருந்து மாதிரிகள் அனுப்பப்படுவதால் முடிவுகள் தெரிவதற்கு குறைந்தபட்சம் ஒரு மாதம் ஆகிவிடுகிறது.இதன் காரணமாக உருமாறிய கொரோனாவின் பரவும் தன்மை அதிகரிக்கிறது.
இந்நிலையை கருத்தில் கொண்டு தமிழகத்தில் நவீன பகுப்பாய்வுகூடம் டி.எம்.எஸ்.வளாகத்தில் அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.இதற்காக அமெரிக்காவில் இருந்து நவீன கருவிகள் வாங்கப்படுகிறது. இந்த கருவிகள் இன்னும் சில தினங்களில் வந்துவிடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இந்த ஆய்வகம் செயல்பட தொடங்கியதும் வைரஸ் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேலும் தீவிரமடையும் அடுத்தடுத்து அலைகள் உருவாவதை கட்டுப்படுத்த முடியும் என்று மருத்துவ வல்லுநர்கள் கூறுகின்றனர்.நவீன பகுப்பாய்வுகூடத்தில் ஆய்வை மேற்கொள்ள ஒரு டாக்டர், மைக்ரோபயாலஜிஸ்ட், பயோ டெக்னாலஜிஸ்டு உள்பட 6 பேர் பெங்களூருக்கு அனுப்பப்பட்டு சிறப்பு பயிற்சி பெற்று வந்துள்ளார்கள்.