
புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருவதால் ஜிப்மர் மையங்களில் பயிலும் எம்.பி.பி.எஸ். முதலாமாண்டு மாணவர்கள், பி.எஸ்.சி. நர்சிங் முதல், 2 மற்றும் 3-ம் ஆண்டு மாணவர்கள் மற்றும் பி.எஸ்.சி. துணை மருத்துவ மாணவர்களுக்கு வருகிற 1-ந்தேதி (ஜூலை) வகுப்புகள் தொடங்க உள்ளன. எம்.பி.பி.எஸ். 2.ம் ஆண்டு, 3-ம் ஆண்டு மாணவர்களுக்கு தனியாக அறிவிப்பு வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பூசியை மருத்துவக் கல்வி பயிலும் மாணவர்கள் கண்டிப்பாக செலுத்திக்கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. ஜிப்மர் வளாகத்தில் மாணவர்கள் இன்று (புதன்கிழமை) முதல் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முதல் தவணை தடுப்பூசியை எங்கு செலுத்தியிருந்தாலும், 2-வது தவணை தடுப்பூசியை ஜிப்மர் வளாகத்தில் செலுத்திக் கொள்ளலாம். கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்கள், கொரோனா பரிசோதனைக்கு பிறகே ஜிப்மர் மையங்களுக்குள் அனுமதிக்கப்படுவர். மற்ற மாணவர்கள் நேரடியாக அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட விடுதி அறைகளுக்குச் செல்லலாம் என்று கூறப்பட்டுள்ளது.