
கலை, அறிவியல் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு அக்டோபர் 4ஆம் தேதி முதல் நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என்று கல்லூரிக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கல்லூரிக் கல்வி இயக்குநரகத்தின் கீழ் 143 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. நடப்பாண்டில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை சமீபத்தில் நிறைவு பெற்றது குறிப்பிடத்தக்கது.
கொரோனா தொற்று பாதிப்பு தொடர்ந்து குறைந்து வந்ததால், 2-ம் மற்றும் 3-ம் ஆண்டு மாணவர்களுக்கு கடந்த செப்.1-ம் தேதி சுழற்சி முறையில் கல்லூரிகள் திறக்கப்பட்டன. இந்நிலையில், முதலாமாண்டு மாணவர்களுக்கு கல்லூரிகளைத் திறந்து வகுப்புகளைத் தொடங்க உத்தரவிடப் பட்டுள்ளது.
2021-2022-ம் கல்வியாண்டின் பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர்களுக்கு அக்.4-ம் தேதிமுதல் உரிய வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி வகுப்புகள் தொடங்கிட நடவடிக்கை எடுக்கவேண்டும். புதிதாகச் சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கு புத்தொளிப் பயிற்சி வழங்க முதல்வர்கள் உரிய ஏற்பாடு செய்ய வேண்டும்.
மேலும்,அரசு உதவிபெறும் மற்றும் சுயநிதி கல்லூரிகளுக்கு இணை இயக்குநர்கள் உரிய அறிவுரை வழங்கவேண்டும். தகுதியுள்ள அனைத்து மாணவர்களுக்கும் (18 வயது பூர்த்தியான) தடுப்பூசி செலுத்திக் கொள்ள அறிவுறுத்த வேண்டும். மேலும் முகக்கவசம் அணியவும், சமூகஇடைவெளியைத் தவறாமல் பின்பற்றவும் அறிவுறுத்தவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.