
பிளஸ்-2 மாணவர்களுக்கான பொதுத் தேர்வானது மே 3 ஆம் தேதி தொடங்கி 21-ந் தேதி முடிவடைகிறது.இந்நிலையில் பிளஸ் 2 மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் பள்ளி கல்வித் துறையின் ஒப்புதலோடு நடத்தப்பட்டு வருகின்றன.தற்போது கொரோனா அதிகரித்து வரும் நிலையில் தனியார் பள்ளிகளின் வகுப்பறைகளில் மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் அமர வைக்கப்படுவதாக ஒரு சில தகவல்கள் பள்ளிக்கல்வித்துறைக்கு வந்தவண்ணம் உள்ளன.
இதனை கருத்தில்கொண்டு ஒரு சில வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. இதன்படி,
*வகுப்பறைகளில் 20 மாணவர்களுக்கு மேல் அமர வைக்க கூடாது.
*வகுப்பறைகளில் 50 சதவீத இருக்கைகள் அல்லது 20 பேருக்கு மிகாமல் மாணவர்கள் அமர வைக்கப்பட வேண்டும்.
*ஆசிரியர் பற்றாக்குறையால் ஒருவர் மட்டுமே பாடம் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டால், கலையரங்கம் உள்ளிட்ட திறந்த வெளிமையங்களில் மாணவர்கள் (தனிநபர் இடைவெளியுடன்) அமர வைக்கப்பட வேண்டும்.
*கொரோனா அறிகுறி உள்ளவர்களை பள்ளிக்குள் அனுமதிக்க கூடாது.
*மாணவர்கள் பள்ளிக்குள் நுழையும் போது உடல் வெப்பநிலை பரிசோதனை செய்ய வேண்டும்.
*ஆசிரியர்கள், மாணவர்கள் பள்ளி வளாகங்களில் முககவசம் அணிவது உறுதி செய்ய வேண்டும்.
இந்த வழிமுறைகளை முறையாக மாணவர்கள் பின்பற்றுகிறார்களா என்பதை பள்ளித்தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும் ,இதில் ஏதேனும் தவறு நேர்ந்தால் பள்ளித்தலைமை ஆசிரியர்கள் அல்லது பள்ளி முதல்வர்கள் பொறுப்பேற்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.