
‘ஜி.எஸ்.எல்.வி. எப்-10’ ராக்கெட் நாளை (வியாழக்கிழமை) பூமி கண்காணிப்பு செயற்கைகோளை சுமந்தப்படி விண்ணில் செலுத்தப்படும் என்று விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ தெரிவித்துள்ளது.
ஜி.எஸ்.எல்.வி. எப்-10 ராக்கெட்டில் முதல்முறையாக செயற்கைக்கோளை வெப்பத்தில் இருந்து பாதுகாப்பதற்காக 4 மீட்டர் விட்டம் கொண்ட கூம்பு வடிவம் கொண்ட வெப்பத்தகடு ஒன்று பொருத்தப்பட்டு இருக்கிறது என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
ஜி.எஸ்.எல்.வி. எப்-10 ராக்கெட் ஆனது இயற்கை பேரழிவுகள், விவசாயம், வனவியல், கனிமவியல், பேரிடர் எச்சரிக்கை, பனி மற்றும் பனிப்பாறைகள் பற்றி அறிந்து கொள்வதற்காக 2 ஆயிரத்து 268 கிலோ எடை கொண்ட ஈ.ஓ.எஸ்.-03 என்ற பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள் வடிவமைக்கப்பட்டு உள்ளது.
இந்த செயற்கைகோள் ஜி.எஸ்.எல்.வி. எப்-10 ராக்கெட்டில் பொருத்தப்பட்டு, வரும் 12-ம் தேதி காலை 5.43 மணிக்கு வானிலை நிலைகளுக்கு உட்பட்டு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவுவதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. தற்போது விண்ணில் செலுத்தப்படுவது ஜி.எஸ்.எல்.வி. ரகத்தில் இது 14-வது ராக்கெட்டாகும்.
விண்ணில் செலுத்தப்படும் பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள் அதிநவீன சுறுசுறுப்பான பூமி கண்காணிப்பு செயற்கைக்கோளாகும். ஜி.எஸ்.எல்.வி. எப்-10 ராக்கெட் திட்டமிட்டபடி நாளை விண்ணில் செலுத்தப்படும் என்றும் அதற்கான கவுண்ட் டவுன் தொடங்கியது எனவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.