
உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக பல்வேறு நிறுவனங்களும் தடுப்பு மருந்துகளை கண்டுபிடித்து வருகிறது.இகனைத் தொடர்ந்து கொரோனா தொற்றுக்கான சிகிச்சை முறை ஒன்றை அமெரிக்க விஞ்ஞானிகள் தற்போது கண்டறிந்து உள்ளனர்.
அமெரிக்காவின் கன்சாஸ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக புரோட்டீஸ் என்சைம் தடுப்பான் (ஜிசி376) மூலம் சிகிச்சை அளித்தால் சிறந்த முன்னேற்றம் காணப்படுவதாக கூறியுள்ளனர்.
அமெரிக்க விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வில்,கொரோனா பாதித்த எலிகள் உள்ளிட்ட விலங்குகளுக்கு புரோட்டீஸ் என்சைம் தடுப்பான் கொண்டு சிகிச்சை அளித்தபோது அதன் இறப்புகள் குறைவதுடன், நுரையீரல் தொற்று குறைவதும் கண்டறியப்பட்டு உள்ளது.மேலும் ,தொற்று பாதித்த எலிக்கு 24 மணி நேரத்துக்கு பின் இந்த சிகிச்சையை மேற்கொள்ளும்போது, சிகிச்சை பெறாத எலிகளை விட சிகிச்சை பெற்ற எலிகளிடம் இறப்பு விகிதம் மிகவும் குறைவதாகவும் கூறப்படுகிறது.
வைரஸ் தடுப்பு மருந்துகளின் ஒரு வகையான இந்த புரோட்டீஸ் தடுப்பான்களால், வைரஸ்களின் இனப்பெருக்கம் தடுப்பதுடன், வைரஸ் உற்பத்திக்கு தேவையான புரதங்களை செயல்படுத்துவதையும் தடுக்கப்படுகிறது.
எலிகளிடம் மேற்கொண்ட சிகிச்சை முறை வெற்றி பெற்றிருப்பதன் மூலம், கொரோனா சிகிச்சை முறைக்கு இது முக்கிய திருப்புமுனையாக அமையும் என்று கருதப்படுகிறது.மேலும்,கொரோனாவுக்கு எதிராக பல்வேறு முறைகளைப் பயன்படுத்தி மேம்பட்ட தடுப்பான்களை வைரஸ் சிகிச்சை நிபுணர்கள் உருவாக்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது