
நாடு முழுவதும் இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் கொரோனா 2-வது அலை தாக்கியது. இதில் ஒரு நாளைக்கு 4 லட்சம் பேர் வரை பாதிக்கப்பட்டனர்.இதையடுத்து தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டன. மேலும் தடுப்பூசி செலுத்தும் பணி வேகப்படுத்தப்பட்டது. தற்போது கொரோனா தொற்று பாதிப்பு பெரும் அளவில் குறைந்துள்ளது.
நாடு முழுவதும் இதுவரை 75 கோடி டோஸ்க்கு மேல் தடுப்பூசி செலுத்தப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் இந்தியாவில் கொரோனா தொற்று அடுத்த 6 மாதங்களில் கட்டுக்குள் வர வாய்ப்பு உள்ளதாக சுகாதார நிபுணர் தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி போட்ட பிறகும் மக்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும். முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களில் 20 முதல் 30 சதவீதம் பேருக்கு பாதிப்பு ஏற்படுகிறது. தடுப்பூசி செலுத்திக்கொள்வது தான் கொரோனா வைரசுக்கு எதிரான மிகப்பெரிய பாதுகாப்பு. பெரும்பாலானோர் ஒரு நோய்க்கு எதிராக எதிர்ப்பு சக்தியை பெறும்போது அந்த நோய் பரவுவது குறையத் தொடங்கி விடும்.
தற்போது கொரோனா தொற்று கட்டுக்குள் வர வாய்ப்பு ஏற்பட்டுள்ளதால் பாதிப்பை நிர்வகிப்பதையும் சுகாதார உள்கட்டமைப்புகளையும் எளிதாக்கும். இந்தியாவில் கொரோனா புதிய மாறுபாடு இல்லை. தற்போது உருவாகி உள்ள சி-1.2 மற்றும் எம்.யூ. ஆகிய உருமாறிய கொரோனா நாட்டில் காணப்படவில்லை. புதிய வைரஸ் மாறுபாடுகள் 3-வது அலையை நாட்டில் ஏற்படுத்தாது.
தடுப்பூசி செயல்திறன் 70 சதவீதம் என்றால் இந்தியாவில் 50 கோடி மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கிடைத்துள்ளது.ஒரு டோஸ் 30 முதல் 31 சதவீதம் வரை நோய் எதிர்ப்பு சக்தியை தருகிறது. ஒரு டோஸ் செலுத்திக் கொண்ட 30 கோடி பேர் 31 சதவீதம் வரை நோய் எதிர்ப்பு சக்தியை பெற்று இருக்கிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது.