
கொரோனா வைரஸ் பெருந்தொற்று பாதிப்பு தற்போது நாள்தோறும் படிப்படியாக வீழ்ச்சி அடைந்து வருகிறது. பல மாநிலங்களில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்குகளும், கடுமையான கட்டுப்பாடுகளும் கொரோனா பரவல் தொற்றை முறியடித்து வருகிறது.இதன் காரணமாக தினசரி நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது,மேலும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை தற்போது உயர்ந்துகொண்டே வருகிறது.
இந்தியா முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 1,00,636 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது .மொத்த பாதிப்பு 2,89,09,975 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்பால் நேற்று இந்தியாவில் ஒரே நாளில் 2427 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின் படி, இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,71,59,180 ஆக உள்ளது.நாடு முழுவதும் கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,49,186 ஆகும் .நேற்று ஒரே நாளில் கொரோனா பிடியிலிருந்து 1,74,399 பேர் குணமடைந்துள்ளனர்.உயிரிழப்பு 1.21 சதவீதமாகவும், குணமடையும் விகிதம் 93.94 சதவீதமாகவும் உயர்ந்துள்ளது.
தற்போது நாடு முழுவதும் பல்வேறு மருத்துவமனைகளில் கொரோனாவுக்காக 14,01,609 பேர் சிகிச்சைப்பெற்று வருவதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது .நாடு முழுவதும் நேற்று வரை பொதுமக்களுக்கு 23,27,86,482 டோஸ்கள் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.