
நாடு முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை மெல்ல மெல்ல கட்டுக்குள் வரத்தொடங்கியுள்ளது. கொரோனா பாதிப்பு குறைந்ததையடுத்து அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகள் மெல்ல மெல்ல தளர்த்தப்பட்டு இயல்புநிலைக்கு திரும்பப்படுகின்றன.
இந்தியா முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 29,689 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு 3,14,40,951 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பால் கேரளாவில் 135, ஒடிசாவில் 62, மகாராஷ்டிரத்தில் 53 பேர் உள்பட நேற்று 415 பேர் இறந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 4,21,382 ஆக உயர்ந்தது.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின் படி, இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,06,21,469 ஆக உள்ளது.நேற்று ஒரே நாளில் 42,363 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.
நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 4.11 லட்சத்தில் இருந்து தற்போது 3,98,100 ஆக குறைந்துள்ளது.
.நாடு முழுவதும் இன்று காலை 7 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் 66,03,112 டோஸ் தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்பட்டுள்ளது. இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 44.19 கோடியாக உயர்ந்தது.
கொரோனாவின் இரண்டாவது அலை படிப்படியாக குறைந்து வந்தாலும், கொரோனா தடுப்பு விதிகளை மக்கள் முறையாக கடைப்பிடிக்காவிட்டால் மூன்றாவது அலை ஏற்படும் அபாயம் உள்ளதாக மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.