
நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 23,285 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது . இந்தியாவில் கொரோனா படிப்படியாக குறைந்து வந்த நிலையில், தற்போது தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருக்கிறது.
இந்தியாவில் கொரோனா தாக்கமானது, குறிப்பாக மராட்டியம், கேரளா, கர்நாடகா, பஞ்சாப், குஜராத் மற்றும் தமிழகம் ஆகிய 6 மாநிலங்களில் பாதிப்புகள் அதிகரித்து வருகிறது.
இன்று வெள்ளிக்கிழமை நிலவரப்படி நாடு முழுவதும் புதிதாக 23,285 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதன்மூலம் இந்தியா முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,13,08,846 ஆக அதிகரித்துள்ளது .கொரோனா தொற்று பாதிப்பால் இன்று ஒரே நாளில் 117 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனாவின் தாக்கமானது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் புள்ளிவிவரப்படி ,இதுவரை கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,09,53,303 ஆக உள்ளது.நாடு முழுவதும் கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,58,306 ஆகும் .
நாடு முழுவதும் தற்போது கொரோனவுக்காக 1,97,237 பேர் சிகிச்சைப்பெற்று வருவதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது .மேலும் இதுவரை 2,61,64,920 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.