
கொரோனா பெருந்தொற்று காரணமாக மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் கீழ் நடத்தப்படும் பள்ளிகளில் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகளை ஒரே கட்டமாக நடத்தினால் மாணவ மாணவியர் தேர்வு எழுத சிரமப்பட நேரிடும் என்பதால், இரண்டுகட்டங்களாக தேர்வுகளை நடத்த சிபிஎஸ்இ முடிவு செய்துள்ளது.
இந்நிலையில் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான முதற் பருவத் தேர்வு அட்டவணையை சிபிஎஸ்இ வெளியிட்டுள்ளது. சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்படும் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான தேர்வு எழுத 36 லட்சம் மாணவ, மாணவியர் பதிவு செய்துள்ளனர். கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 4 லட்சம் மாணவ மாணவியர் கூடுதலாக பதிவு செய்துள்ளதாக சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தற்போது தேர்வு எழுத பதிவு செய்துள்ளவர்களில் 50 சதவீதம் பேர் முதற்கட்ட தேர்வை தாங்கள் படிக்கும் பள்ளிகள் மூலம் எழுத உள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது. இதையடுத்து, முதற்கட்ட தேர்வுக்கான அட்டவணையை, டெல்லியில் உள்ள சிபிஎஸ்இ தலைமை அலுவலகம் நேற்று வெளியிட்டது. இதன்படி, 10ம் வகுப்பு தேர்வு நவம்பர் 30ம் தேதி தொடங்கி டிசம்பர் 9ம் தேதி வரையும், 12ம் வகுப்பு தேர்வு டிசம்பர் 1ம் தேதி தொடங்கி 18ம் தேதி வரையும் நடக்கும் என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு அதிக அளவில் மாணவ மாணவியர் தேர்வு எழுத பதிவு செய்துள்ளதால், 7ஆயிரமாக இருந்த தேர்வு மையங்களை 14ஆயிரமாக சிபிஎஸ்இ உயர்த்தியுள்ளது. மேலும் புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் தற்போது கொள்குறி வினாக்கள் கொண்ட தேர்வுகள் நடத்தப்பட உள்ளதால் முதற்கட்ட தேர்வு 90 நிமிடங்களும் இரண்டாம் கட்ட தேர்வு120 நிமிடங்களும் நடக்கும். இது தவிர இரண்டு கட்ட தேர்விலும் செய்முறைத் தேர்வுகள் இடம் பெறும். முதற்கட்டத்துக்கான செய்முறைகள் அந்தந்த பள்ளிகளில் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.