
நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதன் காரணமாக நாடு பெரும் இன்னல்களை சந்தித்து வந்த நிலையில்,கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு கூடுதல் சிக்கலை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக கொரோனா நோயாளிகளுக்கு இந்த நோயின் தாக்கம் அதிக அளவில் உள்ளது.
கொரோனா நோயாளிகளுக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு அதிகரித்த நிலையில், இந்த நோயை தொற்றுநோயாக அறிவிக்கும்படி மத்திய சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.கருப்பு பூஞ்சை நோய் தொடர்பான புள்ளிவிவரத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதில், நாடு முழுவதும் இதுவரை 11717 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
கருப்பு பூஞ்சை தொற்று என்பது மியூகோர்மைகோசிஸ் எனப்படும் பூஞ்சை தொற்றாகும்,இது ஒன்றும் புதியது இல்லை. கொரோனா தொற்று பரவத் தொடங்குவதற்கு முன்பிருந்தே அதனால் பாதிக்கப்படுவோர் இருந்து வந்தனர். குறிப்பாக கட்டுப்பாடற்ற சர்க்கரை அளவு உள்ளவர்கள், எச்ஐவி தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், ரத்தப் புற்றுநோய் உள்ளவர்கள், தீக்காயங்களால் பாதிக்கப்பட்டவர்கள், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்தவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவதால் இந்த பாதிப்பு ஏற்பட்டு வந்தது.
கருப்பு பூஞ்சை தொற்றின் எண்ணிக்கை குஜராத் மாநிலத்தில் அதிக அளவாக 2859 பேருக்கும் ,அதற்கு அடுத்து மகாராஷ்டிராவில் 1770 பேருக்கும், ஆந்திராவில் 768 பேருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது.மேலும் கருப்பு பூஞ்சை சிகிச்சைக்கு கூடுதலாக 29,250 ஆம்போமெரிசின் பி குப்பிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன என்று மத்திய ரசாயனங்கள் மற்றும் உரத்துறை மந்திரி சதானந்த சவுடா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.