
தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் வரும் 23ம் தேதி முதல் செப்டம்பர் 3ம் தேதி வரை மாணவர் சேர்க்கை நடைபெறும் என கல்லூரிக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்று வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, ஆன்லைன் அல்லது நேரடியாகவும் மாணவர் சேர்க்கையை நடத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள 143 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள 1 லட்சத்து 20 ஆயிரம் இடங்களில் மாணவர் சேர்க்கையானது நடைபெற இருக்கிறது.இதுவரை 3 லட்சம் மாணவ மாணவியர் தங்கள் விண்ணப்பங்களை இணையதளம் மூலம் பதிவேற்றியுள்ளனர்.மாணவர் தர வரிசைப் பட்டியல் ஆகஸ்ட் 17ம் தேதி வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மாணவர்களின் விண்ணப்பங்களை அந்தந்த கல்லூரி முதல்வர்கள் பதிவிறக்கம் செய்து, மாணவர்கள் பிளஸ் 2 வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அரசுத் தேர்வுத்துறையின் மூலம் சரிபார்த்து அதன் உண்மைத் தன்மையின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இதில் ஏதேனும் தவறு கண்டுபிடிக்கப்பட்டால் அந்த மாணவரின் சேர்க்கையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
மாணவர் சேர்க்கையானது ஆகஸ்ட் 23ம் தேதி முதல் செப்டம்பர் 3ம் தேதி வரை நடத்த வேண்டும். இது தொடர்பான விவரங்களை எஸ்எம்எஸ், இமெயில் மூலம் மாணவர்களுக்கு தெரிவிக்க வேண்டும். முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.