
கொரோனா 3-வது அலை உருவாகுமா என்பதை கணிக்க முடியாது. இருப்பினும், அப்படி வந்தாலும், 2-வது அலை போன்று மோசமானதாக இருக்காது என்று கூறப்பட்டுள்ளது.
கொரோனா 2-வது அலையில் ஏராளமான மக்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று குணமடைந்தனர். அதனால் அவர்களுக்கு இயல்பான நோய் எதிர்ப்பு சக்தி கிடைத்தது. பின்னர் தடுப்பூசி போட்டுக் கொண்டதால், ‘ஹைபிரிட் இம்யூனிட்டி’ எனப்படும் கலப்பு நோய் எதிர்ப்பு சக்தி கிடைத்தது.
கொரோனா தாக்காதவர்கள், தடுப்பூசி போட்டதால் பெற்ற நோய் எதிர்ப்பு சக்தியை விட இவர்களுக்கு கிடைத்த நோய் எதிர்ப்பு சக்தி அதிகம். அத்துடன், தடுப்பூசி போட்டவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து இருப்பதால், தினசரி பாதிப்பு குறைவாக உள்ளது.
இந்தியாவில் கொரோனா 2-வது அலை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 3-வது அலை, கடந்த அக்டோபர் அல்லது இந்த மாதத்தில் உச்சத்தை எட்டும் என்று பெரும்பாலான தொற்றுநோய் நிபுணர்கள் கணித்து இருந்தனர். ஆனால் தற்போது அவர்களின் கணிப்புகள் பொய்த்து போயுள்ளன. தீபாவளி முடிந்து 3 வாரங்கள் நிறைவடைய உள்ளது. இருப்பினும், நாடு முழுவதும் தினசரி பாதிப்பு குறைந்து வருகிறது.
ஐரோப்பா, வடஅமெரிக்கா ஆகிய நாடுகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அங்கே நடப்பது இந்தியாவில் எதிரொலிப்பது வழக்கம். ஆனால், இந்த தடவை அப்படி நடக்காது. அப்படி நடப்பதாக இருந்தால், ஏற்கனவே அறிகுறி தெரிந்து இருக்கும்.
ஒருவேளை 3-வது அலை வந்தால் கூட மென்மையானதாகவே இருக்கும். 3-வது அலை இப்போதைக்கு வருமா என்று கேட்டால், எந்த மாதிரியான ஆய்வும் இதை உண்மையிலேயே கணிக்க முடியாது என்று இயற்பியல் பேராசிரியர் சீதாப்ரா சின்கா கூறியுள்ளார்.