
இந்தியாவில் தற்போது புதிதாக கொரோனா உருமாற்றம் அடையவில்லை என மருத்துவ நிபுணர்கள் தகவல் ஒன்றை தெரிவித்துள்ளனர். கொரோனா வைரஸ் பல்வேறு நாடுகளிலும் பல வகைகளாக உருமாற்றம் அடைந்தது .அந்த வகையில் 2 முறை உருமாற்றம் அடைந்த டெல்டா வைரஸ் அதிக வீரியம் கொண்டதாக மாறியது. அதுதான் இந்தியாவில் 2-வது அலையை ஏற்படுத்தியது.
தற்போது இந்த வைரஸ் மேலும் உருமாற்றம் அடைந்து பரவத் தொடங்கியது. டெல்டாவில் இருந்து உருமாறிய ஏஒய்.4.2 வைரஸ் இங்கிலாந்து, அமெரிக்காவில் கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஆனால் இந்தியாவில் ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, கேரளா, காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் ஏஒய்.4.2 வைரஸ் பரவத் தொடங்கி இருப்பதாகவும், அது சிலரை தாக்கி இருப்பதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் இந்தியாவில் புதிதாக கொரோனா வைரஸ் உருமாற்றம் அடையவில்லை என்று மருத்துவ நிபுணர்கள் குழுவான இன்சாக் அமைப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்பு கூறியதாவது:-
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு டெல்டா வைரசின் மாறுபாடு மற்றும் அதனுடன் தொடர்புடைய துணை வகைகளாகும். டெல்டா வைரஸ் (பி.1.6177.2 மற்றும் ஏஒய்.எக்ஸ்) மூலம் இந்தியாவில் கொரோனா பாதிப்பு உள்ளது. இந்த வைரஸ் இந்தியாவில் புதிதாக உருமாற்றம் அடையவில்லை. ஏஒய்.எக்ஸ் என்பது 1-25 வரையிலான துணை கோடுகளின் குடும்பத்தை குறிக்கிறது.
தற்போது அதிக அளவில் கொரோனா பாதிப்புக்கு டெல்டாவின் உருமாற்றம் தான் காரணம். புதிதாக எதுவும் உருமாற்றம் அடையவில்லை என்று கூறப்படுகிறது.