நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 18,795 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,36,97,581 ஆக உயர்ந்துள்ளது.
கேரளாவில் 5 வாரங்களில் இல்லாத அளவில் நேற்று பாதிப்பு 11,699 ஆக குறைந்தது. மிசோரத்தில் 1,846, தமிழ்நாட்டில் 1,657 பேருக்கு புதிதாக தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.
கொரோனா தொற்று பாதிப்புக்கு ஒரே நாளில் 179 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் நாடு முழுவதும் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,47,373 ஆக உள்ளது.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின் படி, இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,29,58,002 ஆக உள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 26,030 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 2,92,206 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்நிலையில் நாடு முழுவதும் 13,21,780 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.
கொரோனாவின் இரண்டாவது அலை படிப்படியாக குறைந்து வந்தாலும், கொரோனா தடுப்பு விதிகளை மக்கள் முறையாக கடைப்பிடிக்காவிட்டால் மூன்றாவது அலை ஏற்படும் அபாயம் உள்ளதாக மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.