
நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 29,616 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.கடந்த 2 நாட்களாக பாதிப்பு 31,923, 31,382 ஆக இருந்த நிலையில் இன்று 29,616 பேருக்கு பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,36,24,419 ஆக உயர்ந்துள்ளது.
நாடு முழுவதுமான நேற்றைய பாதிப்பில் கேரளாவில் மட்டும் 61 சதவீதம் உள்ளது. அதாவது அங்கு புதிதாக 17,983 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று பாதிப்புக்கு ஒரே நாளில் 290 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் நாடு முழுவதும் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,46,658 ஆக உள்ளது.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின் படி, இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,28,76,319 ஆக உள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 28,046 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 3,01,442 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. நாடு முழுவதும் நேற்று 71,04,051 தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்பட்டுள்ளது. இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 84.89 கோடியாக உயர்ந்துள்ளது.
கொரோனாவின் இரண்டாவது அலை படிப்படியாக குறைந்து வந்தாலும், கொரோனா தடுப்பு விதிகளை மக்கள் முறையாக கடைப்பிடிக்காவிட்டால் மூன்றாவது அலை ஏற்படும் அபாயம் உள்ளதாக மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.