
18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கோவேக்சின் தடுப்பூசியை செலுத்தும் பரிசோதனை தற்போது நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனம் பெரியவர்களுக்கான கோவேக்சின் தடுப்பூசியை தயாரித்து வினியோகித்து வருகிறது. இந்நிலையில் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான கோவேக்சின் தடுப்பூசியையும் இந்த நிறுவனம் உருவாகியுள்ளது. இந்த தடுப்பூசியை குழந்தைகளுக்கு செலுத்தி பரிசோதிக்கும் 2, 3-ம் கட்ட பரிசோதனை முடிந்துள்ளது.
குழந்தைகளுக்கான பீடியாட்ரிக் கோவேக்சின் தடுப்பூசி தற்போதுதான் 2, 3-ம் கட்ட பரிசோதனையை நடத்தி முடித்துள்ளது. இந்த பரிசோதனையில் 1000 குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தி பரிசோதிக்கப்பட்டுள்ளது.
தற்போது செயல்திறன் உள்பட பல்வேறு தரவுகளை சேகரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. அடுத்த வாரம் இந்த தரவுகளை மருந்து கட்டுப்பாட்டு அமைப்புக்கு சமர்ப்பிப்போம் என்று பாரத் பயோடெக் நிறுவனத்தின் தலைவர் கிருஷ்ணா இலா கூறியுள்ளார்.
நடப்பு செப்டம்பர் மாதத்தில் கோவேக்சின் தடுப்பூசி உற்பத்தி அளவு 3½ கோடி டோஸ் ஆகும்.மேலும் அடுத்த மாதத்தில் கோவேக்சின் தடுப்பூசி உற்பத்தி அளவு 5½ கோடியை எட்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.