
பொறியியல் மேற்படிப்புகளுக்காக நடத்தப்படும் கேட் நுழைவுத் தேர்வுக்கான மாணவர்களின் விண்ணப்பப் பதிவு திடீரென ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் செப்டம்பர் 2 முதல் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று ஐஐடி காரக்பூர் தெரிவித்துள்ளது.
ஆண்டுதோறும் கேட் நுழைவுத் தேர்வை சென்னை, டெல்லி உள்ளிட்ட 7 ஐஐடி நிறுவனங்களில் ஏதேனும் ஒன்று அல்லது பெங்களூரு இந்திய அறிவியல் நிறுவனம் நடத்தும். 2022-ம் ஆண்டுக்கான கேட் தேர்வை தற்போது ஐஐடி காரக்பூர் நடத்துகிறது.
ஐஐடி, ஐஐஎஸ்சி உள்ளிட்ட மத்திய அரசின் தேசிய உயர் கல்வி நிறுவனங்களில் எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பிளான் உள்ளிட்ட பொறியியல் மேற்படிப்புகளில் சேர்வதற்கு கேட் (Graduate Aptitude Test in Engineering) என்ற நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. சில தனியார் உயர் கல்வி நிறுவனங்களும் கேட் தேர்வை அடிப்படையாகக் கொண்டு, மாணவர் சேர்க்கையை நடத்துகின்றன.
ஒவ்வொரு கல்வி ஆண்டிலும் மாணவர் சேர்க்கைக்கான கேட் நுழைவுத் தேர்வு பிப்ரவரி மாதத்தில் பல்வேறு கட்டங்களாக நடைபெறும். அந்த வகையில் 2022-23ஆம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான கேட் நுழைவுத் தேர்வு பிப்ரவரி 5, 6, 12, 13 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.
கேட் தேர்வை எழுத ஆகஸ்ட் 30 முதல் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் விண்ணப்பப் பதிவு திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் செப்டம்பர் 2-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று ஐஐடி காரக்பூர் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் விண்ணப்பிக்கக் கடைசித் தேதியில் மாற்றம் செய்யப்படவில்லை. மாணவர்கள் செப்டம்பர் 24-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். தாமதக் கட்டணத்துடன் விண்ணப்பிக்க அக்டோபர் 1 கடைசி நாள் ஆகும்.
தேர்வுக்கான ஹால் டிக்கெட் ஜனவரி 3-ம் தேதி வெளியாகிறது. அதேபோலத் தேர்வு முடிவுகள் மார்ச் 17ஆம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது