கொரோனா தொற்று குறைந்து வருவதால் பள்ளிகளை திறக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. அதன் அடிப்படையில் செப்டம்பர் 1-ந்தேதி முதல் முதல்கட்டமாக 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி 50 சதவீத மாணவர்களை சுழற்சி முறையில் பள்ளிக்கு அழைத்து நேரடி வகுப்பு நடத்த அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளி கல்வித்துறை செய்து வருகிறது.
பள்ளிக்கு 16 மாதங்களுக்கு பிறகு வரும் மாணவர்கள் மிகுந்த மனஅழுத்தத்தில் இருக்கக்கூடும் என்பதால் அவர்களுக்கு தொடக்கத்திலேயே பாடத்திட்டங்களை நடத்த வேண்டாம் எனவும் அதற்கு பதிலாக அடிப்படை இணைப்பு பயிற்சி நடத்த வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. சிறு வினாக்கள், ஒருவரி வார்த்தைகள் போன்ற எளிய நடைமுறையில் பாடங்களை 3 வாரங்களுக்கு நடத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இணைப்பு பயிற்சிக்கான செயல்திட்டத்தை மாநில கல்வியியல் ஆராய்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தயாரித்து வழங்குகிறது. பள்ளி வேலை நாட்கள் மூன்றில் ஒன்றாக இதற்காக குறைக்கப்பட்டுள்ளது. 50 சதவீத மாணவர்கள் வகுப்புக்கு வருவதால் 40 நாட்கள் அடிப்படை பயிற்சி வகுப்புகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.