
நாடு முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை மெல்ல மெல்ல கட்டுக்குள் வரத்தொடங்கியுள்ளது. இன்றைய கொரோனா பாதிப்பு நேற்றைய பாதிப்பை விட சற்று குறைந்துள்ளது.நாடு முழுவதும் கொரோனா தினசரி பாதிப்பில் கேரளா தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது. கேரளாவில் புதிதாக 20,772 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 41,649 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு 3,16,13,993 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,23,810 ஆக உள்ளது.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின் படி, இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,07,81,263 ஆக உள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 4,08,920 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்தியாவில் இதுவரை 46.15 கோடி டோஸ் தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்பட்டுள்ளது. இதில் 35.98 கோடி பேருக்கு முதல் டோசும், 10.16 கோடி பேருக்கு 2-வது டோசும் போடப்பட்டுள்ளது.
கொரோனாவின் இரண்டாவது அலை படிப்படியாக குறைந்து வந்தாலும், கொரோனா தடுப்பு விதிகளை மக்கள் முறையாக கடைப்பிடிக்காவிட்டால் மூன்றாவது அலை ஏற்படும் அபாயம் உள்ளதாக மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.