
நாடு முழுவதும் நடப்பாண்டிற்க்கான நீட் தேர்வு இளநிலை மாணவர்களுக்கு செப்டம்பர் 12ல் நடைபெறும் எனவும்,மேலும் முதுகலை மருத்துவப் படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத் தேர்வு வரும் செப்டம்பர் மாதம் 11ஆம் தேதி நடத்தப்படும் எனவும் மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
நீட் தேர்வால் கிராமப்புற மாணவர்கள் எதிர்கொள்ளும் சவால்களையும் சிக்கல்களையும் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே .ராஜன் தலைமையிலான குழு அளித்த ஆய்வின் நகலை தமிழக சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் ,மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திரா பிரதானிடம் சமர்ப்பித்தார். மேலும் இதுவரை நீட் தேர்வால் 13 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள் என்பதையும் அதனால் தேர்வு எவ்வகையிலும் மாணவர்களை பாதிக்காமல் இருப்பதற்கான சில ஆலோசனைகளையும் மத்திய அமைச்சருக்கு வழங்கியதாக சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்தார்.
நீட் தேர்வு இந்த ஆண்டு அனைத்து மாநிலங்களிலும் நடைபெறும் என்பதையும் தேர்வில் ஏற்படுகிற தோல்வியால் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வது வேதனையானது எனவும் மேலும் தமிழகத்தில் புதிதாக செங்கல்பட்டு ,விருதுநகர் , திருப்பூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்கள் நீட் தேர்வு மையங்களாக செயல்படும் என்ற அறிவிப்பையும் மத்திய கல்வி அமைச்சர் வெளியிட்டார்.
நீட் நுழைவுத் தேர்வானது முன்னதாக 155 நகரங்களில் நடத்தப்பட்டு வந்த நிலையில் , தற்போது கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இம்முறை 198 நகரங்களில் நீட்தேர்வு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.