
சிகா வைரஸ் முதன்முறையாக கேரளத்தில் கர்ப்பிணி பெண் ஒருவருக்கு உறுதிசெய்யப்பட்டுள்ளது.இந்நிலையில் கேரளாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
கேரளாவை சேர்ந்த 24 வயது கர்ப்பிணி ஒருவர் கடந்த மாதம் 28-ந்தேதி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அவருக்கு காய்ச்சல், தலைவலி மற்றும் உடல் முழுவதும் சிவப்பு புள்ளிகள் ஏற்பட்டதன் காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு,அந்த பெண்ணின் ரத்த மாதிரிகள் புனேயில் உள்ள வைரஸ் ஆய்வு நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பரிசோதனையின் முடிவில் அவருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சிகா வைரஸ் பாதிப்பானது முதன்முதலில் ஆப்பிரிக்காவிலும் பின்னர் தென் அமெரிக்கா உள்ளிட்ட பிற வெப்பமண்டல பகுதிகளிலும் கண்டறியப்பட்டது. இந்த வகை வைரஸானது ஏடிஎஸ் கொசுக்களால் பரவும் வைரஸ் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நோயால் பாதிக்கும் கர்ப்பிணிகளுக்கு,பிறக்கும் குழந்தைகளின் தலை இயல்பான குழந்தையின் தலை அளவைக் காட்டிலும் சிறியதாக இருக்கும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
நாடு முழுவது உருமாறிய கொரோனா வைரஸானது அச்சுறுத்தி வரும் நிலையில் ,தற்போது புதிய பாதிப்பாக ஜிகா வைரஸ் மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.