
தமிழகத்தில் தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறையில் உள்ளது.எனினும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதன் காரணமாக முழு ஊரடங்கை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் குழு தமிழக அரசுக்கு பரிந்துரை செய்தது.
இதனடிப்படையில் முதலமைச்சர் முன்னிலையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது.இதில் கொரோனா ஊரடங்கு பற்றிய முக்கிய முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்த்த நிலையில் ,தற்போது தமிழகக்தில் தளர்வுகள் இன்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.முழு ஊரடங்கானது 24.05.2021 காலை முதல் நடைமுறைக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது.
முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து,பொதுமக்களின் நலன் கருதி, இன்று (22-5-2021) இரவு 9 மணிவரையிலும், நாளை 23.05.2021 (ஞாயிற்றுக்கிழமை) ஒரு நாள் மட்டும் காலை 06.00 மணி முதல் இரவு 09.00 மணி வரை அனைத்துக் கடைகளும் திறக்க அனுமதி வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முழு ஊரடங்கின் போது அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகள் :
- மருந்தகங்கள், நாட்டு மருந்து கடைகள், கால்நடை மருந்தகங்கள் போன்றவைகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
- பால் விநியோகம், குடிநீர் மற்றும் தினசரி பத்திரிக்கை விநியோகம்.
- பொது மக்களுக்கு தேவையான காய்கறிகள், பழங்கள், தோட்டக்கலைத் துறை மூலமாக சென்னை நகரத்திலும், அனைத்து மாவட்டங்களிலும் சம்மந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து வாகனங்கள் மூலமாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தலைமைச் செயலகத்திலும், மாவட்டங்களிலும், அத்தியாவசியத் துறைகள் மட்டும் இயங்கும்.
- தனியார் நிறுவனங்கள், வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் போன்றவற்றில் பணிபுரிவோர், வீட்டிலிருந்தே பணிபுரிய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
- மின்னணு சேவை (E-commerce) காலை 08.00 மணி முதல் மாலை 06.00 வரை இயங்கலாம்.
- உணவகங்களில் காலை 6.00 மணி முதல் 10.00 மணி வரையிலும், நண்பகல் 12.00 மணி முதல் மதியம் 3.00 மணி வரையிலும், மாலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையிலும் பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படுகிறது. Swiggy, Zomato போன்ற மின் வணிகம் (E-commerce) மூலம் உணவு விநியோகம் செய்யும் நிறுவனங்கள் மேற்கண்ட நேரங்களில் மட்டும் அனுமதிக்கப்படும்.
- பெட்ரோல், டீசல் பங்க்குகள் வழக்கம் போல் செயல்படும் .
- ஏடிஎம் மற்றும் அவற்றிற்கான சேவைகள் அனுமதிக்கப்படும்.
- வேளாண் விளை பொருட்கள் மற்றும் இடுபொருட்களை கொண்டு செல்வதற்கு அனுமதிக்கப்படும்.
- சரக்கு வாகனங்கள் செல்லவும், அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்லவும் அனுமதிக்கப்படும்.
- உரிய மருத்துவக் காரணங்கள் மற்றும் இறப்புகளுக்காக மட்டும் மாவட்டம் விட்டு மாவட்ட செல்ல இ-பதிவுடன் அனுமதிக்கப்படும்.
- மருத்துவக் காரணங்களுக்காக மாவட்டத்திற்குள் பயணிக்க இ-பதிவு தேவையில்லை.
- செய்தி மற்றும் ஊடக நிறுவனங்கள் வழக்கம் போல் இயங்கலாம்.
- தடையின்றி தொடர்ந்து செயல்பட வேண்டிய தொடர் செயல்முறை தொழிற்சாலைகள் (Continuous Process Industries), அத்தியாவசியப் பொருட்கள், மருத்துவ உபகரணங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் (Industries Manufacturing Essential Commodities and Medical equipment) ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்களின்படி அனுமதிக்கப்படும்.