
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 4 வளாகக் கல்லூரிகள் செயல்படுகின்றன.அவை கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரி, சென்னை தொழில்நுட்பக் கல்லூரி (எம்ஐடி), கட்டிடக்கலை மற்றும் திட்டமிடுதல் பள்ளி ஆகியவையாகும். இந்தக் கல்லூரிகளில் கடந்த ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்தில் நடத்தவேண்டிய பருவத்தேர்வுகள் கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் நடத்தப்பட்டது.
கொரோனா தொற்று மற்றும் ஊரடங்கு காரணமாக இணைய வழியில் தேர்வுகள் நடத்தப்பட்டன. ஆனால் தொழில்நுட்பக் கோளாறு மற்றும் ஒரு சில பிரச்சினைகள் காரணமாக வளாகக் கல்லூரி தேர்வுகளை மாணவர்களால் எழுத முடியாத நிலை ஏற்பட்டது. அவர்களுக்கு மறுதேர்வு நடத்த அண்ணா பல்கலைக்கழகம் திட்டமிட்டிருந்த நிலையில், கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்ததன் காரணமாக ,மீண்டும் மறுதேர்வு ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது கடந்த ஆண்டு நவம்பர்- டிசம்பரில் நடத்தவேண்டிய பருவத்தேர்வும், கடந்த ஆண்டு நவம்பர் அரியர் தேர்வு மற்றும் இந்த ஆண்டு ஏப்ரல் அரியர் தேர்வு ஆகிய தேர்வுகள் வரும் மே 17-ம் தேதி முதல் தொடங்கும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
மேலும், பிப்ரவரி 1 முதல் மார்ச் 4 வரை ஆன்லைன் தேர்வு நடைபெறுவதாக இருந்த மாணவர்களுக்கு மட்டுமே இந்தத் தேர்வு அட்டவணை பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற மாணவர்களுக்கான தேர்வு அட்டவணை பின்னர் வெளியிடப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.மேலும் விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ இணையத்தை அணுகவும்.