
தமிழகத்தில் 2020-21 ஆம் ஆண்டுக்கான 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கொரோனா தொற்று பரவல் காரணமாக ரத்து செய்யப்பட்டு, மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.இந்நிலையில் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண் சான்றிதழ் இன்று ( ஆகஸ்ட் 23) இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
மாணவர்கள் உயர்கல்வியில் சேர 12ஆம் வகுப்பு மதிப்பெண் அவசியம் என்பதால் 10 மற்றும் 11ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மதிப்பெண் பட்டியல் தயாரிக்கப்பட்டு கடந்த ஜூலை மாதம் 19 ஆம் தேதி ஆன்லைன் மூலமாக வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 25 ஆம் தேதி அரசு வெளியிட்ட அறிவிப்பின் படி, 10 ஆம் வகுப்பு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் இன்று (ஆகஸ்ட் 23) இணையத்தில் வெளியிடப்படும் என்றும்,மேலும் இன்று காலை 11 மணி அளவில் மதிப்பெண் சான்றிதழ் பதிவேற்றம் செய்யப்படும் எனவும் தேர்வுத்துறை இயக்குனர் உஷாராணி தெரிவித்துள்ளார்.
மாணவர்கள் மதிப்பெண் சான்றிதழ்களை தேர்வு துறையின் அதிகாரபூர்வ இணையதளமான www.dge.tn.gov.in என்ற முகவரியில் பதிவு எண், பிறந்த தேதி, ஆகிய விவரங்களை பதிவு செய்து சான்றிதழ்களை ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.மேலும் அணைத்து பள்ளிகளும் தற்காலிக சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம் என்று பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.